கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது ஏப்ரி கிராமம். கிருஷ்ணகிரியிலிருந்து கர்நாடக மாநிலம், கோலார் தங்க வயல் செல்லும் சாலையில் இந்தக் கிராமம் உள்ளது. இங்கு கடந்த 60 ஆண்டுகளாக எந்த அரசியல் கட்சிக் கொடிகளும் ஏற்றப்படுவதில்லை. இங்குள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மட்டும் தேசியக் கொடி ஏற்றப்படுகிறது.
இந்தக் கிராமத்தில் 100 வீடுகள் உள்ளன. சுமார் 300-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ராவ், வெள்ளாளக் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இங்கு வசித்து வருகின்றனர்.
அமைதி, ஒற்றுமைக்காக அரசியல் கட்சிகளின் கொடிகளை ஏற்ற வேண்டாம் என கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பே முடிவெடுத்து, அதை இன்றளவும் ஏப்ரி கிராம மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.
இதுகுறித்து அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவரும், மணவாரனப்பள்ளி ஊராட்சி மன்ற உறுப்பினருமான ராமசந்திர ராவ் கூறியது:
""கிராமத்தின் ஒற்றுமைக்காக எங்கள் முன்னோர்கள் எடுத்த முடிவை இன்று வரை கடைப்பிடித்து வருகிறோம். அதேவேளையில், தேர்தலின் போது, அவரவர் தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க தடையேதும் இல்லை. கட்சி வேட்டிகளை உடுத்திக் கொள்ளலாம். ஆனால், தாங்கள் சார்ந்த அரசியல் கட்சிகளின் கொடிகளை ஏற்ற அனுமதியில்லை.
அதேபோல, அரசியல் கட்சிகளின் தோரணங்களைக் கட்டுவதோ, சுவர் விளம்பரங்கள் செய்வதோ கூடாது. துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கக் கூடாது என்ற சுய கட்டுப்பாட்டுடன் எங்கள் கிராம மக்கள் உள்ளனர். இதனால், அரசியல் பகை
என்பது எங்கள் கிராமத்தில் இல்லை.
எங்கள் கிராமத்தைப் பின்பற்றி பக்கத்து கிராமமான சிங்கிரிபள்ளியிலும் கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் கட்சிக் கொடிகளை ஏற்ற அனுமதிப்பதில்லை'' என்றார் அவர்.
சுதந்திர தின விழா, குடியரசு தின விழாக்களின் போது கொடியேற்ற நிகழ்ச்சியில் கிராம மக்கள் அனைவரும் பங்கேற்று தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.